ஆய்வரங்க மாநாடு 2024 - சிங்கப்பூரின் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான ஆற்றல்கள்
ஆண்டுதோறும் தமிழ்மொழி விழா ஏப்ரல் மாதம் முழுவதும் சிங்கையில் எழில் கோலம் காண்கின்றது. தொடர்ந்து 18வது ஆண்டாகக் கொண்டாடப்படும் தமிழ்மொழி விழாவில், சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம் ஆய்வரங்க மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தது. "சிங்கப்பூரின் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான ஆற்றல்கள்" எனும் தலைப்பில் ஆய்வரங்க மாநாட்டினை நடத்தியது. சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் அவர்களின், ஐக்கிய நாடுகள் சபையின் 78வது பொது விவாதக் கூட்டத்தில் விளக்கிய சிங்கப்பூரின் தேசிய குறிக்கோளின் அடிப்படையில் சிங்கப்பூரின் சவால்கள் என்ற சிந்தனையையும், தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் இந்த ஆண்டின் நோக்கமான 'ஆற்றல்' என்ற சிந்தனையையும் இணைந்து மாநாட்டின் தலைப்பு உருவாகியது.
உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் ஏப்ரல் 21ஆம் தேதி பேராசிரியர் வீரமணி, திருவாட்டி மாலதி பாலா, திருவாட்டி பிரதீபா ராஜேந்திரன், திருவாட்டி அ. மல்லிகா, திரு ரசபாலன் ஆகியோரது வழிகாட்டுதலுடன் சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்ற இளையர்களால் கூட்டப்பட்ட மாநாட்டில், பேராளர்கள் பொது மற்றும் இளையர் பிரிவுகளில் தங்கள் ஆய்வுகளை படைத்தனர்.


மாநாட்டின் தொடக்க விழாவில் மாநாட்டின் ஏற்பாட்டுக்குழுத் தலைவர் அபிஷா முத்துக்குமரன் கருத்தரங்க மாநாட்டின் கருப்பொருளான "சிங்கப்பூரின் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான திறன்களைக் கண்டறிந்து மேம்படுத்துவதை" விளக்கினார். தொடர்ந்து சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்ற தலைவர் லாவண்யா பிரேம்ஆனந்த் ஆய்வரங்க மாநாட்டினை சிறப்பிக்க ஆய்வாளர்கள் அனைவரையும் வினைத்திறன் மிக்க படைப்புக்களையும் கருத்துக்களையும் முன்வைக்க பணித்தார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஜூரோங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டான் வூ மெங்க் (Tan Wu Meng), மூப்படையும் சிங்கப்பூர் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் சவால்களை அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து எவ்வாறு எதிர்கொள்வது என்றும், தாய் மொழி தாண்டி பிறமொழிகளையும் அறிந்து கொள்வதனால் ஒன்றிணைந்த சமூகத்தினை உருவாக்கலாம் என்றும் கூறினார். மாநாட்டின் முதன்மைப் பேச்சாளர் இணைப் பேராசிரியர் முனைவர் சித்ரா சங்கரன், தமிழ்மொழியில் இரட்டை மொழி வழக்கும் அதன் சமூக சவால்களையும் விவரித்தார். தொண்மையான தமிழ்மொழியின் இருவேறு பிரிவுகளான 'பேச்சுவழக்கு: மற்றும் 'எழுத்துவழக்கு' பற்றியும், பேச்சுவழக்கில் பிறமொழி சேர்க்கை பற்றியும் தனது ஆய்வினை முன்வைத்தார்.


தொடர்ந்து இடம்பெற்ற 11 அரங்குகளில், பொதுப்பிரிவு ஆய்வாளர்கள் தமிழ்மொழி தொடர்பான ஆற்றல்களை வளர்ப்பதில் உள்ள சவால்கள், அதனை எதிர்கொள்ளத் தேவையான திறன்களையும் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பின் தேவையையும், தமிழில் பிறமொழி கலப்பு மற்றும் காரணிகளையும் முன்வைத்தனர். மேலும், சமூக ஊடகங்களின் ஆற்றல், சமூக அமைப்புக்களின் பங்களிப்பு, கல்வியியல் பயணம் மற்றும் தலைமைத்துவம் போன்ற ஆய்வுகள் விவாதிக்கப்பட்டன. இளையர் பிரிவில் கலந்துகொண்ட மாணவர்கள் சிங்கப்பூர் சுற்றுச்சூழல், தொழில்திறன்கள் மற்றும் மென்திறன்களின் முக்கியத்துவம், தலைமைத்துவம், இல்லங்களில் தமிழ்மொழிப்பயன்பாடு போன்ற ஆய்வுகளை விவாதித்தார்கள். பார்வையாளர்களும் கேள்வி நேரத்தில் தமது ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும் பகிர்ந்து மாநாட்டினை சிறப்பித்தார்கள். மொத்தமாக 50 கட்டுரைகளில்லிருந்து 20 சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றுக்கு 100 வெள்ளி பரிசளிக்கப்பட்டது.


மாநாட்டின் இறுதி அங்கமாக, பொது அமர்வில் சிங்கப்பூரின் ஒலி/ஒளி அலைகள் மற்றும் சமூக ஊடகங்களில் செல்வாக்கு மிக்கவர்களின் கண்ணோட்டம் மாநாட்டின் சிறப்பினை கூட்டியது. ஒலி 968 கலைஞர்களான திரு காதர், திரு ரவி குணா, வசந்தம் தொலைக்காட்சி கலைஞர் திரு தவனேசன், சமூக வலைத்தளப் பிரபலம் திரு ரித்திக் பாண்டியன் ஆகியோர் பங்கேற்ற அந்த அமர்வில், தமிழ்மொழிப் பயன்பாடு பற்றியும், அதன் சவால்களையும், எதிர்கொள்ளும் திறன்களையும் கலந்துரையாடினர். மேலும் அவையோரின் கேள்விகளுக்கு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து இளையர்களை ஊக்கப்படுத்தினர்.
மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுவின் துணைத்தலைவர் திரு பிரணவன் சிவலிங்கம் அவர்களின் நன்றி உரையுடன் ஆய்வரங்க மாநாடு இனிதே நிறைவேறியது.
30 Apr 2024
Article By : Mr. Thanushan